ஆவடி: மகன் இறந்ததால் ஏற்பட்ட குடும்ப தகராறில் கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், மூர்த்திநகர் புத்துக்கோயில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணப்பன் (32). இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மீனா (26) என்ற மனைவியும், மைலாஸ் (3) என்ற மகனும் உள்ளார். ஜஸ்வந்த் (6) என்ற இவர்களின் மூத்த மகன் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தபோது புடவை கழுத்தில் சிக்கியதால் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 நாட்களுக்கு முன், கோபித்துக்கொண்டு மீனா அருகில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த கண்ணப்பன், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை 11 மணியளவில் கண்ணப்பனின் தம்பி சரவணன், கண்ணப்பன் வீட்டிற்குச் சென்று நீண்ட நேரம் கதவை தட்டியுள்ளார்.
திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தூக்கிட்டு கண்ணப்பன் தற்கொலை செய்துகொண்டது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.