திருமலை : தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரெ தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக கார் நிறுத்தப்பட்டதால் அதில் இருந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கர்னூலுக்கு கார் ஒன்று நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது.
வனபர்த்தி மாவட்டம் கொத்தகோட்டாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்புறத்தில் புகை வந்ததால் அதனை கவனித்த காரில் வந்த 3 பேர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். இதனால் அவர்கள் காயமின்றி தப்பினர். சில நிமிடங்களில் கார் முழுவதும் மளமவென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து கருகியது. பின்னர், வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.