திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மண்டலம் 6வது வார்டுக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் 7, 8வது தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் மழை நீர் கால்வாய் இல்லாததால் மழைக்காலங்களில் மேற்கண்ட பகுதி தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்பதுடன் வீடுகளிலும் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மழை நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு 2 மணி நேரம் தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள 2 தெருக்களிலும் சுமார் 2 அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கியுள்ளதுடன் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, மழைக்காலத்துக்கு முன்பாக சத்தியமூர்த்தி நகர் பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும்’ என்று மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.