கனடாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு சகோதரியை தேடி வந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை: கனடாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தனது சகோதரியை தேடிவந்த முதியவர், செய்யூர் அருகே நண்பர் வீட்டில் தங்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.யின் நெருங்கிய நண்பர் நிமிலரஞ்சன் (54). ஸ்ரீலங்காவை சேர்ந்த இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்து அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், நிமிலரஞ்சனின் உடன் பிறந்த சகோதரி ஒருவர் தென் மாவட்டத்தில் இருப்பதாகவும், அவரை தேடி கடந்த மாதம் 30ம் தேதி தமிழ்நாட்டிற்கு வந்தார். தென் மாவட்டத்தில் உள்ள அவரது சகோதரியை தேடி சென்றார். ஆனால், அங்கு அவர் இல்லாததால் ஏமாற்றமடைந்து, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கடுகப்பட்டு என்ற கிராமத்தில் உள்ள அவரது நண்பரின் வீட்டில் தங்கினார்.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி நிமிலரஞ்சனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி நிமிலரஞ்சன் பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இறந்த நிமிலரஞ்சனின் தாய் மற்றும் அவரது மூத்த சகோதரர் லண்டனில் இருந்து வந்ததும் உடலை ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தனது நீண்டகால நண்பரான நிமிலரஞ்சன் இறந்த தகவலை அறிந்த திருமாவளவன் நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்து, நிமிலரஞ்சனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை