செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நெற்குணம் ஊராட்சியில் வயலூர், புத்தகமங்கலம், புலியனை, தூதுவிலம்பட்டு, உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 600 குடும்பத்தினர் வீடுகட்டி வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 2000 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள வயலூர் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதியை ரத்து செய்யக் கோரியும் புதிதாக கல்குவாரி துவங்க தடை விதிக்க கோரியும் நெற்குணம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜிடம் கோரிக்கை மனுவினை வழங்கினார். இந்த மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து நெற்குணம் ஊராட்சி பொதுமக்கள் கூறுகையில், ‘விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் எங்கள் கிராமத்தில் தற்போது கல்குவாரி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி வழங்கினால் கல்குவாரியினால் மாசு சுகாதார சீர்கேடு அடையும் நிலத்தடி நீர் பாதிக்கும் விவசாயம் கால்நடைகள் பாதிப்பு ஏற்படும் குவாரிகளில் அதிக சத்தமாக வெடி வெடிக்கும் போது வீடுகளில் விரிசல் ஏற்படும்.
இதனால் இந்த கல்குவாரியை உடனடியாக தடை செய்ய வேண்டும். இது குறித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். உடனடியாக ரத்து செய்யவில்லை என்றால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.