சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ. வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கைகள் முந்தைய அதிமுக ஆட்சிக் கால ஊழல், முறைகேடுகளை பக்கம், பக்கமாக சுட்டிக்காட்டியுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து அரசு உரிய முறையில் விசாரணை நடத்தி தவறிழைத்தோர், தவறுக்கு துணையாக இருந்தவர்களை தண்டிக்க வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனத்துக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். எனவே கவர்னரை பதவி நீக்கம் செய்ய வற்புறுத்தி உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.