இதைத் தொடர்ந்து சிஏஏ சட்டம் அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், சிஏஏ சட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க தனியாக இணையதளம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் விண்ணப்பம் செய்த 14 பேருக்கு பல கட்ட ஆய்வுகளுக்குப் பின் இந்திய குடியுரிமை சான்றிதழ்களை ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நேற்று வழங்கியதாக அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. குடியுரிமை சான்றிதழ் பெற்றவர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் மிஸ்ரா வாழ்த்து தெரிவித்தார். இது ஒரு வரலாற்று நாள் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.
அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘நாடு சுதந்திரம் அடைந்த போது அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்களின் பல ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மோடியின் உத்தரவாதம், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம்’’ என கூறி உள்ளார். சிஏஏ சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2019ல் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. இச்சட்டம் பாரபட்சமானது என பல தரப்பினர் குற்றம்சாட்டினர். மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட தலைவர்கள் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம் என கூறி வரும் நிலையில், 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.