மதுரை: மதுரை புதூரில் அதிமுக சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசியதாவது: தற்போது கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் 40 சதவீதம் பெறுவார் என்று கூறினார்கள். இது மோசமான கருத்து கணிப்பாகும். டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவரும் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம். தொகுதிக்கு பத்தாயிரம் வாக்குகள் தான் இவர்கள் பெற்றுள்ளனர்.
அது மட்டுமல்ல. கோவையில் பாஜவிற்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். இது கருத்துக்கணிப்பு அல்ல. கருத்து திணிப்பு. ஏனென்றால் நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது ஒரு சதவீதம் தான் வெற்றி வாய்ப்பு என்றனர். நான் 25 சதவீத வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.இவ்வாறு அவர் கூறினார்.