* கூட்டணி குறித்து பேசிக்கிட்டே இருக்கோம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி மார்கோனி கார்டனில் மாற்று கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இணையும் விழா மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதுவுமே செய்யவில்லை என்கின்றனர். ராமநாதபுரத்தில் அப்துல் கலாம் அறிவியல் கல்லூரி ஆரம்பித்தது அதிமுக ஆட்சியில் தான். அப்துல் கலாம் ஜனாதிபதியாக அதிமுக ஆட்சி முக்கிய பங்காற்றியது. அதிமுக ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கும் நிறைய செய்துள்ளோம். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரோ அல்லது கூட்டணி கட்சி வேட்பாளரோ யார் நின்றாலும் அவரை வெற்றி பெற வைக்க அதிமுகவினர் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளீர்கள் என நிருபர்கள் கேட்டதற்கு, ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை. கூட்டணி பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை. தமிழகத்தில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும். கூட்டணி அமைந்த உடன் பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்படும்,’ என்றார்.