தீ கட்டுக்குள் அடங்காமல் தொடர்ந்து எரிந்ததால் உடனடியாக தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடினர். முடியாததால் உதவிக்கு கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அசோக் நகர் மற்றும் மேடவாக்கம் ஆகிய பகுதியில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. 9 வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருந்தபோதிலும் பிளாஸ்டிக் குடோன் முழுவதும் எரிந்து சாம்பலானது. தீ விபத்தால் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. குடோன் அருகில் வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவதியுற்றனர். இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் சதிச்செயலா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டபோது உரியநேரத்தில் வடமாநில தொழிலாளர்கள் வெளியில் ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்தால் நேற்று நள்ளிரவு பரபரப்பு ஏற்பட்டது.