சென்னை: ஜூன் 10ம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது பள்ளி/கல்லூரி சீருடையுடன் தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி, கல்லூரி வரையில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
மேலும் வெளியான றிக்கையில்; “ஜுன் 10, 2024 அன்று பள்ளிகள் /அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, 2024-25 கல்வியாண்டில் மாணவர் / மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்குவதில் உள்ள கால அளவினை கருத்தில் கொண்டு மா.போ.கழக பேருந்துகளில் மா.போ.கழகத்தால் 2023-24-ல் வழங்கப்பட்ட பயண அட்டை, பள்ளி மாணவ/மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் சென்று வருவதற்கு. அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் 2023-24 ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
பள்ளி கல்விதுறையுடன் இணைந்து கட்டணமில்லா பயண அட்டையினை இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி துவங்கும்/முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ / மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்கி செல்ல அனைத்து மா.போ.கழக நடத்துநர் / ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.