Saturday, September 28, 2024
Home » இளம் தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.50 லட்சம் பறித்த வழக்கு; இனிக்க இனிக்க பேசி அழைத்து சென்ற வேலூரை சேர்ந்த இளம் அழகி கைது: தலைமறைவாக உள்ள ஆண் நண்பர்களுக்கு போலீஸ் வலை

இளம் தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.50 லட்சம் பறித்த வழக்கு; இனிக்க இனிக்க பேசி அழைத்து சென்ற வேலூரை சேர்ந்த இளம் அழகி கைது: தலைமறைவாக உள்ள ஆண் நண்பர்களுக்கு போலீஸ் வலை

by Suresh

சென்னை: ராயப்பேட்டையை சேர்ந்த இளம் தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.50 லட்சம் பணம் பறித்த வழக்கில், கடத்தப்பட்ட நபரை ஆசைவார்த்தைகள் கூறி அழைத்து சென்ற வேலூரை சேர்ந்த இளம் அழகி ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டை பக்சி அலி தெருவை சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன்(32). இளம் தொழிலதிபரான இவர், பர்மா பஜாரில் சொந்தமாக செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் வெளிநாடுகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் மொத்தமாக வரவழைத்து தனது கடையில் விற்பனை செய்து வருகிறார். ஜாவித் சைபுதீனுக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே முகம் தெரியாத பெண் ஒருவர் ஜாவித் சைபுதீனிடம் செல்போன் மூலம் அடிக்கடி மெசேஜ் மற்றும் வாட்ஸ் அப் கால் பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியுள்ளது. ஆனால் எதிர் முனையில் பேசிய இளம் பெண் தனது புகைப்படத்தை அனுப்பாமல் நேரில் சந்திக்கலாம் என்று பேசி வந்துள்ளார். அதன்படி கடந்த 17ம் ேததி ஜாவித் சைபுதீனை தொடர்பு கொண்டு, பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூ 2வது தெருவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ளேன். நீங்கள் வந்தால் இருவரும் வெளியே செல்லலாம் என்று கூறியுள்ளார். பல நாட்கள் செல்போனில் பேசிய பெண் தன்னை நேரில் சந்திக்க அழைத்ததும், இளம் தொழிலதிபரான ஜாவித் சைபுதீன் தனது காரை எடுத்து கொண்டு அவசர அவசரமாக சம்பவ இடத்திற்கு சென்றார்.

பின் இளம் பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர், உங்களை நான் பார்த்துவிட்டேன் எதிரே உள்ள காரில் அமர்ந்து இருக்கிறேன் வாருங்கள் என்று கூறியுள்ளார். உடனே ஜாவித் சைபுதீன் தனது காரை நிறுத்திவிட்டு இளம் பெண் அழைத்த காருக்கு சென்று உள்ளே அமர்ந்து தனது காதலியை நேரில் பார்த்த சந்தோஷத்தில் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென காரின் அருகே வந்த 4 பேர் கொண்ட கும்பல், ஜாவித் சைபுதீனை கத்திமுனையில் மிரட்டி சத்தம் போடக்கூடாது என்று கூறி காரில் கடத்தி சென்றுள்ளனர். அப்போது அவரிடம் இருந்து 2 செல்போன்கள், தனது காதலியுடன் ஒன்றாக இருக்க செலவுக்கு கொண்டு வந்த ரூ.10 ஆயிரம் பணத்தை அவர்கள் பறித்து கொண்டனர்.

பிறகு உன்னை உயிரோடு விட வேண்டும் எனறால் ரூ.50 லட்சம் பணம் தர வேண்டும். இல்லை என்றால் உன்னை நாங்கள் கொலை செய்து விடுவோம் என கத்திமுனையில் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜாவித் சைபுதீன் நீங்கள் கேட்ட பணத்தை கொடுத்துவிடுகிறேன் என்னை விட்டுவிடுங்கள் என்று கூறி அவரது செல்போனில் மனைவி மற்றும் சகோதரனை தொடர்பு கொண்டு அவசரமாக ரூ.50 லட்சம் பணம் தேவைப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து பல கோடி மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் வந்துள்ளதாக கூறி தெரிவித்துள்ளார். அதன்படி 2 தவணையாக ரூ.50 லட்சம் பணத்தை உறவினர்கள் மூலம் கடத்தல் கும்பல் பெற்றுள்ளனர். அந்த பணத்தை யாருக்கும் சந்தேகம் வராதப்படி, ஜாவித் சைபுதீன் பயன்படுத்திய காரை கடத்தல் கும்பல் பயன்படுத்தி பணத்தை பெற்றுள்ளனர். இதனால் அவரது உறவினர்களுக்கும் எந்த வித சந்தேகமும் வரவில்லை. மேலும், இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை அவர்களை மிரட்டி எடுத்துள்ளனர்.

பிறகு இது குறித்து வெளியே சொன்னால் இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உன் மீது இளம் பெண் மூலம் புகார் அளித்துவிடுவோம் என்று மிரட்டி, சேத்துப்பட்டு மேம்பாலம் அருகே இறக்கிவிட்டுள்ளனர். உனது காரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளோம் எடுத்து செல் என்று கூறி அனுப்பியுள்ளனர்.உயிர் பிழைத்தால் போதும் என்று இளம் தொழிலதிபர் ஜாவித் சைபுதீன் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்தார். பிறகு நடந்த சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாமல் தவிர்த்து வந்தார். நண்பர்கள் அறிவுரைப்படி நடந்த சம்பவத்தை மயிலாப்பூர் துணை கமிஷனர் ரஜத் சதுர்வேதியிடம் ஜாவித் சைபுதீன் புகார் அளித்தார். அந்த புகாரின் படி கடத்தல் மற்றும் பணம் பறித்த பகுதியான பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

பட்டினப்பாக்கம் போலீசார் சிசிடிவி பதிவுகளை பெற்றும், இளம் தொழிலதிபரிடம் பேசிய இளம் பெண் செல்போன் எண்ணை வைத்தும் தீவிர விசாரணை நடத்தினர். அதில், வேலூரை சேர்ந்த சோனியா(26) என்ற இளம் பெண்ணே தொழிலதிபரை மயக்கி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ரூ.50 லட்சம் பணம் பறித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் வேலூரில் பதுங்கி இருந்த சோனியாவை அதிரடியாக நேற்று இரவு கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து தற்போது தலைமறைவாக உள்ள கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் இதுபோல் வசதியான பல இளம் தொழிலதிபர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் கைது செய்யப்பட்டுள்ள சோனியாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

three × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi