இந்நிலையில், எதிரில் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் செல்வோரின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் அதிக ஒளி கொண்ட முகப்பு விளக்குகள் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்களுடன் பல வாகனங்கள் விதிமீறி இயக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், தமிழகம் முழுவதும் கடந்த நவ.1ம் தேதி நடத்தப்பட்ட வாகன சோதனையில், ஏர் ஹாரன் மற்றும் கண் கூசும் விளக்குகள் பொருத்தப்பட்ட 639 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசந்தரம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கடந்த நவ.1ம் தேதி 12 போக்குவரத்து மண்டலங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், அமலாக்க பிரிவு அதிகாரிகள் பங்கேற்று 3,667 வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் பல்வேறு விதிமுறைகளை மீறிய 639 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.36 லட்சத்து 94 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது.
1,059 வாகனங்களில் இருந்து ஏர் ஹார்ன்களும், 180 வாகனங்களில் இருந்து பல வண்ண ஒளி விளக்குகளும் அகற்றப்பட்டது. இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கைள் தொடரும். மேலும் அதி ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் வண்ண விளக்குகள் பொருத்தப்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி சீட்டு வழங்கப்பட வேண்டும், என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.