மதுராந்தகம்: மதுராந்தகம் புறவழி சாலையில் தனியார் சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இதில், 2 பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. தென்காசியில் இருந்து சென்னை நோக்கி 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு சொகுசு பஸ் ஒன்று இன்று நேற்று காலை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த பஸ் மதுராந்தகம் புறவழிச் சாலையில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
தூக்க கலக்கத்தில் இருந்த பயணிகள் விபத்தை அறிந்ததும் கூச்சலிட்டபடி இறங்க முயற்சித்தனர். அப்போது, அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களுக்கு உதவி செய்தனர். மேலும், மதுராந்தகம் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மாற்று பேருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், இரண்டு பேருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.