சோமனூர்: சேலத்தில் இருந்து நேற்று மதியம் அரசு பஸ் 67 பயணிகளுடன் கோவை வந்துகொண்டிருந்தது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே வந்தபோது திடீரென பஸ்சின் முன்பக்கத்தில் கரும்புகை வெளியேறியது. உடனடியாக டிரைவர் சிவக்குமார் சாலையோரத்தில் பஸ்சை நிறுத்தினார். பயணிகள் அலறியடித்தபடி பொருட்களை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினர். அடுத்த சில நிமிடங்களில் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து சூலூர் தீயணைப்பு துறையினர் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.