பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அடையாறு எல்.பி சாலையில் மாலை 3.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனைக் கண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். பயணிகள் பீதியில் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர்.
அடுத்த சில நிமிடங்களுக்குள் பேருந்து முழுவதும் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. திருவான்மியூர் மற்றும் மயிலாப்பூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரைமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுதொடர்பாக சாஸ்திரிநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.