சென்னை: கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் படகில் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ ஹெராயின், ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் 1000 தோட்டாக்கள் கடத்திய வழக்கில் பல மாதங்களாக சென்னையில் தலைமறைவாக இருந்த தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த லிங்கம் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய கடலோர எல்லையான லட்சத்தீவு மற்றும் கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதிக்கு இடையே மீன்பிடி படகு ஒன்று நுழைந்தது. இந்த படகை கடலோர பாதுகாப்பு படையினர் வழிமறித்து ஆய்வு செய்தனர்.
அதில், மிளகாய் பொடிக்கு இடையே மறைத்து வைத்திருந்த பல கோடி மதிப்புள்ள 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47 துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. வெளி நாடுகளில் இருந்து ஆயுதங்கள் கடத்தப்பட்டதால் உடனே கடலோர பாதுகாப்பு படையினர் மீன்பிடி படகில் இருந்த 6 பேரை பிடித்து திருவனந்தபுரத்தில் உள்ள என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன்படி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பிடிபட்ட 6 பேரிடம் விசாரணை நடத்திய போது, 6 பேரில் ஒருவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்த சற்குணம் (எ) சபேசன் (47) என்றும், இவர் ஆதரவாளர்களுடன் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
உடனே என்ஐஏ அதிகாரிகள், விடுதலைப்புலி இயக்கத்தின் உளவுப்பிரிவு அதிகாரி சற்குணம் (எ) சபேசன் உள்பட 6 பேர் மீதும் சட்டவிரோத ஆயுதம் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 ஏ.கே.47 துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மீன்பிடி படகு, செயற்கைக்கோள் செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. செயற்கைக்கோள் செல்போனை என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்த போது, பலமுறை சென்னை குன்றத்தூரில் வசித்து வந்த கொழும்பை சேர்ந்த சுரேஷ் ராஜன் என்பவரிடம் பேசியது உறுதியானது. அதைதொடர்ந்து சுரேஷ் ராஜனை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சற்குணம் (எ) சபேசன் சென்னை வளசரவாக்கத்தில் தங்கி இருந்த வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சற்குணம் மற்றும் சுரேஷ் ராஜன் ஆகியோர் அளித்த தகவலின்படி, என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி சென்னை, திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாம் என தமிழகம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 58 செல்போன்கள், 68 சிம்கார்டுகள், 2 பென் டிரைவ், 1 ஹார்ட் டிஸ்க், 2 லேப்டேப், 8 வைபை மோடம்கள், வெளிநாடுகளுக்கு ரொக்க பணம் பரிவர்த்தனை செய்த ஆவணங்கள், 1 இலங்கை பாஸ்போர்ட், ரூ.80 லட்சம் பணம், 9 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்திய வழக்கு மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்தாக 10 இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுத்துறை அதிகாரியாக இருந்த சற்குணம், குணசேகரன் உள்ளிட்ட 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில், இலங்கையை சேர்ந்த ஆதிலிங்கம் (எ) லிங்கம், ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குணசேகரனின் நெருங்கிய கூட்டாளி என்றும், குணசேகரனின் பினாமியாக அவர் செயல்பட்டு சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ய பல வகையில் உதவி செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கும் ஆயுதம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்த சட்டவிரோதமாக பண பரிமாற்றத்திற்கும் உதவி செய்துள்ளார். மேலும், லிங்கம் போதைப்பொருட்கள் கடத்தி வரும் கும்பல்கள் தங்குவதற்கு, போலி ஆணங்கள் மூலம் இந்தியாவில் தங்க ஏற்பாடுகள் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. பாகிஸ்தானில் இருந்து தப்பி ஓடிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஹாஜி சலீம் என்பவரிடம் இருந்து போதைப்பொருட்கள் சட்டவிரோதமாக வாங்க பண பரிவர்த்தனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கையை சேர்ந்த முக்கிய குற்றவாளியான ஆதிலிங்கம் (எ) லிங்கம் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்திய வழக்கில் 14வது குற்றவாளியாக லிங்கத்தை கைது செய்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.