உரிய விதிமுறைகளை பின்பற்றி நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கட்டிட கழிவை கொட்ட வேண்டும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியில் கட்டிடகழிவுகளை ஒவ்வொரு மண்டலத்திலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே கொட்ட வேண்டும் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கட்டிட கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை சட்டவிரோதமாக பொது இடங்களில் கொட்டப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, இக்கழிவுகளை சேகரித்துச் செல்வதில் ஈடுபட்டுள்ள தனியார் லாரி உரிமையாளர்கள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி பெருநகர சென்னை மாநகராட்சியின் அங்கீகாரத்திற்குட்பட்டு அத்தகைய கழிவுகளை சென்னை மாநகராட்சியால் இதற்கென ஒதுக்கீடு செய்து நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் எவ்விதமான கட்டணமுமின்றி இலவசமாக கொட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மண்டலத்திலும் தலா ஒரு இடம் என கீழே குறிப்பிட்டுள்ள 15 இடங்கள் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, 1வது மண்டலம், 7வது வார்டுக்கு உட்பட்ட பக்கிங்காம் கால்வாய் சாலை, சாத்தாங்காடு திருவொற்றியூர் (லாரி நிலையம் அருகில்), 2வது மண்டலம், 21வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் சாலை, மணலி (மண்டல அலுவலகம் அருகில்), 3வது மண்டலம், 26வது வார்டுக்கு உட்பட்ட சி.எம்.டி.ஏ டிரக் முனையம், இரவு காப்பகம் அருகில் (மாதவரம் பேருந்து நிலையம் பின்புறம்), 4வது மண்டலம், 37வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு அவென்யூ சாலை, மகாகவி பாரதி நகர் வியாசர்பாடி, 5 மற்றும் 6வது மண்டலங்களில், 58வது வார்டு, 70வது வார்டுக்கு உட்பட்ட பழைய கால்நடை கிடங்கின் ஒரு பகுதி, அவதானம் பாப்பையா சாலை, சூலை (மாநகராட்சி பள்ளி எதிரில்), 7வது மண்டலம், 91வது வார்டுக்கு உட்பட்ட கவிமணி சாலை (முகப்பேர் ஏரி திட்டம் 1வது பிரதான சாலைக்கு எதிரில்), 8வது மண்டலம், 101வது வார்டுக்கு உட்பட்ட ஷெனாய் நகர் முதல் பிரதான சாலை, (கஜலட்சுமி காலனி அருகில்), 9வது மண்டலம், 120வது வார்டுக்கு உட்பட்ட லாய்ட்ஸ் காலனி (மாநகராட்சி ஐடிஐ அருகில்), 10வது மண்டலம், 127வது வார்டுக்கு உட்பட்ட குரு சிவா தெரு, எஸ்.எம்.பிளாக், ஜாபர்கான்பேட்டை கோடம்பாக்கம் (எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையம் அருகில்), 11வது மண்டலம், 155வது வார்டுக்கு உட்பட்ட நடராஜன் சாலை மற்றும் பாரதி சாலை சந்திப்பு (ராமாபுரம் ஏரி அருகில்), 12வது மண்டலம், 158வது வார்டுக்கு உட்பட்ட நந்தம்பாக்கம் குப்பை மாற்று வாளாகம் (அடையாறு நதிக்கரை அருகில்), 13வது மண்டலம், 174வது வார்டுக்கு உட்பட்ட வேளச்சேரி பிரதான சாலை (குருநானக் கல்லூரி மற்றும் வேளச்சேரி மயான பூமி அருகில்), 14வது மண்டலம், 186வது வார்டுக்கு உட்பட்ட 200 அடி ரேடியல் சாலை, பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம், 15வது மண்டலம், 197வது வார்டுக்கு உட்பட்ட கங்கையம்மன் கோயில் தெரு விரிவாக்கம், காரப்பாக்கம் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அருகில்) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள கட்டிட கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை சேகரித்துக் கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ள தனியார் லாரி உரிமையாளர்கள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் கட்டிடகழிவுகளை கொட்டுவதற்கான இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட கழிவு சேகரிப்பாளர்களாகப் பதிவு செய்திட திடக்கழிவு மேலாண்மைத் துறைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விதிமீறி பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Related posts

கொடைக்கானலில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் காட்டு மாடுகள்

ஆந்திராவில் இடிதாக்கி கணவன், மனைவி பலி

Give and Take Policy தான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு; மழைப்பொழிவு இருந்தால் பிரச்சனையே இருக்காது :ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி