சென்னை: கட்டிடங்கள் மற்றும் பயன்பாட்டு சேவைகளை வரைபடம் தயாரிப்பதற்கு ட்ரோன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள 2,79,240 எண்ணிக்கையிலான ஏற்கனவே கண்டறியப்பட்டு நிலுவையில் உள்ள மாறுபட்டுள்ள கட்டிடங்களை மறு ஆய்வு பணிகளை ஒன்பது மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி இந்தியாவிலேயே முதல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பாக கட்டிடங்கள் மற்றும் பயன்பாட்டு சேவைகளை வரைபடம் தயாரிப்பதற்கு ட்ரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் அனைத்து சொத்துக்களையும் மற்றும் அனைத்து பயன்பாட்டு சேவைகளின் அடிப்படை வரைபடத்தை தயாரிப்பதற்கு செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ட்ரோன் இரண்டையும் பயன்படுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் அளவீடு, உபயோக தன்மை மாறுபாடு உள்ள கட்டிடங்களாக 3,10,139 எண்ணிக்கைகள் தாராஷா அண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தினால் கண்டறியப்பட்டு சென்னை மாநகராட்சிக்கு அறிக்கையாக சமர்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட 3,10,139 எண்ணிக்கையில் இதுவரை 30,899 எண்ணிக்கையிலான மாறுபாடு உள்ள கட்டிடங்கள் வருவாய்த்துறை கள பணியாளர்கள் மூலம் அளவீடு செய்து பணிகள் முடிக்கப்பட்டன. மீதம் உள்ள 2,79,240 எண்ணிக்கையிலான அளவீடு, உபயோகதன்மை மாறுபாடு உள்ள கட்டிடங்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. தொடர்ந்து நிலுவையில் உள்ள 2,79,240 எண்ணிக்கையிலான ஏற்கனவே கண்டறியப்பட்டு நிலுவையில் உள்ள மாறுபட்டுள்ள கட்டிடங்களை மறு ஆய்வு பணிகளை ஒன்பது மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, இப்பணிகளுக்காக உத்தேச செலவீன தொகையாக ரூ.5 கோடி ஒதுக்க மன்றத் தீர்மான மூலம் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து மேற்கண்ட பணிக்கான ஒப்பம் கோரப்பட்டு கடந்த ஜனவரி 3ம் தேதி ஒப்பம் திறக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டு பணி ஆணை வழங்க மன்றத்தின் அனுமதி பெறப்பட்டது. மாறுபாடு உள்ள கட்டிடங்களின் எண்ணிகை மண்டல வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிக்கான பணி ஆணையினை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் துணை ஆணையர் விஷு மஹாஜன் ஆகியோர் முன்னிலையில் நேற்று ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணை மற்றும் அங்கீகார கடிதம் வழங்கப்பட்டது. மேலும், இப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சீருடை, தொப்பி மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.