கட்டிட அடித்தளத்தில் இயங்கிய 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு ‘சீல்’: டெல்லி மாநகராட்சி அதிரடி

புதுடெல்லி: தனியார் ஐஏஎஸ் பயிற்சி அகாடமியில் மழை வெள்ளம் புகுந்து 3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து சட்டவிரோதமாக அடித்தளத்தில் செயல்பட்டு வந்த 13 பயிற்சி மையங்களுக்கு டெல்லி மாநகராட்சி சீல் வைத்துள்ளது. டெல்லியின் பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை பெய்த கனமழையால், பெருக்கெடுத்த வெள்ளம் திடீரென்று தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளப் பகுதியில் உள்ள நூலகத்திற்குள் புகுந்தது. அப்போது அங்கிருந்த மாணவர்கள் எதிர்பாராத வெள்ளத்தில் சிக்கினர்.

அடித்தளத்தில் ஒரு வாயிலுடன் நூலகம் செயல்பட்டு வந்ததால், 27 மாணவர்கள் மேல் தளத்துக்கு பத்திரமாக வந்துவிட்டனர். ஆனால்,அடித்தளத்தில் 12 அடி உயரத்துக்கு வேகமாக நிரம்பிய வெள்ளத்தில் சிக்கி உபியை சேர்ந்த ஸ்ரேயா யாதவ் (25), தெலங்கானாவை சேர்ந்த தன்யா சோனி (25), கேரள மாநிலத்தை சேர்ந்த நெவின் டெல்வின் (24)ஆகியோர் உயிரிழந்தனர். ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து டெல்லி அரசு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதை தொடர்ந்து விதிகளை மீறி செயல்பட்டு வரும் ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் குறித்த கணக்கெடுப்பை டெல்லி மாநகராட்சி மேற்கொண்டது. 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவையும் மாநகராட்சி நியமித்துள்ளது. தொடர்ந்து கட்டிடத்தின் அடித்தளங்களில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த பயிற்சி மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். நேற்று இரவு வரை சட்ட விரோதமாக செயல்பட்ட 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய டெல்லியில், டெல்லி மாநகராட்சி தீவிர சோதனை நடத்தியது. அந்த சோதனையில், கட்டிடத்தில் அடித்தளத்துடன் இயங்கும் பயிற்சி மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. 3 பேர் உயிரிழப்பு தொடர்புடைய பயிற்சி மையத்துக்கு ஏற்கனவே மாநகராட்சி சீல் வைத்துள்ளது. 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபிஷேக் குப்தா மற்றும் ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில்,மேலும் 5 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அடித்தளத்தில் பயிற்சி மையத்தின் நுாலகமாக செயல்பட்டு வந்த அறையின் உரிமையாளர். சம்பவத்தின்போது பயிற்சி மையத்தின் அருகே உள்ள சாலையில் காரை வேகமாக ஓட்டி வந்த டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காரை வேகமாக ஓட்டி வந்ததால் தான் சாலையில் தேங்கி இருந்த வெள்ளம் பயிற்சி மைய கட்டிட இரும்பு கேட் உடைந்து அடித்தளத்தின் உள்ளே வெள்ளம் புகுந்ததாக போலீசார் குற்றம்சாட்டினர். இதற்கிடையே அந்த பகுதியின் மாநகராட்சி இளநிலை பொறியாளர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் உதவிப் பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.

* இழப்பீட்டை ஏற்க மறுத்த மாணவன் குடும்பம்
பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி துணை நிலை ஆளுநரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் தங்களுக்கு இழப்பீடு தேவையில்லை. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாணவர் நெவின் டெல்வினின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது