தாம்பரம்: கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கேட்ட தாம்பரம் மாநகராட்சி கட்டிட வரைபட திட்ட ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டலத்தில் உள்ள நகர அமைப்பு பிரிவில் கட்டிட அனுமதி பெறுவதற்கு லஞ்சம் பெறப்பட்டு வருவதாக தொடர் புகார்கள் எழுந்தது. இந்நிலையில் புரோக்கர் ஒருவர் மூலம் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாஸ்கர் தலைமையிலான சிறப்பு குழுவினர் நேற்று குரோம்பேட்டை, சிஎல்சி ஒர்க்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே புரோக்கர் ஒருவரை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தியதில், 2வது மண்டல அலுவலக கட்டிட வரைபட திட்ட ஆய்வாளர் நாகராஜ் என்பவருக்கு தான் லஞ்சம் வாங்குவதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகராஜை கைது செய்து அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.