பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என அர்த்தமல்ல: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை

டெல்லி: பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என அர்த்தமல்ல என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை அளித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில் மக்களவையில் பட்ஜெட் தொடர்பான கருத்துகளை முன்வைத்து எதிர்க்கட்சி தலைவர் பேசினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது,

பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை

தற்போது தாக்கலான பட்ஜெட் மிஷன் 2047 என்பதற்கான முதல் படியாகும். ரூ.1.46 லட்சம் கோடி சுகாதாரத்துறைக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரை மேம்படுத்த தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.48.21 லட்சம் கோடி. கொரோனா காலத்தில் ஒன்றிய அரசின் துரித நடவடிக்கைகளால் விரைவில் மீண்டெழுந்தோம். ஒன்றிய பட்ஜெட்டில் நகர்ப்புற வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பெயர் இல்லாததால் புறக்கணிப்பு என்று அர்த்தமல்ல

பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என அர்த்தமல்ல. தவறான புரிதலோடு சிலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். சிலர் கூறிய தவறான கருத்துகள் எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை கொடுத்திருக்கிறது. தவறான கருத்துகளை பரப்பும் செயலில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

நாங்கள் செய்தால் மட்டும் தவறா?

2004-05 பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இடம்பெறவில்லை; அதற்கு யு.பி.ஏ. அரசு நிதி தரவில்லையா?. 2009-2010 ஆண்டுகளில் 26 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் செய்தால் தவறவில்லை; நாங்கள் செய்தால் மட்டும் தவறா என்றும் அமைச்சர் நிர்மலா கேள்வி எழுப்பினார். ஒன்றிய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் விளக்கம் அளித்தார்.

Related posts

புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி

வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி