பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்; வாக்குப்பதிவு இன்று தொடங்கியது

லண்டன்: பிரிட்டனில் கடந்த 2022ம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைகிறது. எனினும், பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மே 30ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிரிட்டனை பொறுத்தவரை கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சிதான் ஆட்சி பொறுப்பில் இருந்து வருகிறது. ஆனால் பல குளறுபடிகள் நடந்து வருகிறது. 5 முறை கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர்கள் மாறியிருக்கின்றனர். ஆனால் பிரிட்டன் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. ஒரு காலத்தில் உலகையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிட்டன், தற்போது பொருளாதாரத்தில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்டவை பிரதான பிரச்னையாக மாறியிருக்கிறது. அதனால் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனை சரி செய்ய அந்நாட்டு அரசு திணறி வருகிறது. நிலைமை இப்படி இருக்கையில் நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 650 உறுப்பினர்களை கொண்ட தேர்தலில் 9 தமிழர்கள் களம் காண்கின்றனர். உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது.

 

Related posts

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு