பீகாரில் மேலும் ஒரு பாலம் சரிந்து விபத்து: 15 நாளில் 7வது சம்பவம்

சிவான்: பீகார் தொடர் பால விபத்துகள் அரங்கேறும் மாநிலமாக மாறி வருகிறது. கடந்த மார்ச் மாதம் சுபால் மாவட்டம் மரிச்சா பகுதி அருகே கோசி ஆற்றின் மீது 10.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.984 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

கடந்த ஜூன் 18ம் தேதி அராரியா மாவட்டம் பராரியா கிராமத்தில் பக்ரா ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த புதிய பாலம் திறப்பு விழாவுக்கு சில தினங்களுக்கு முன் சரிந்து விழுந்தது. சிவான் மாவட்டத்தில் ராம்கர் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த 30 ஆண்டுகள் பழமையான பாலம் கடந்த 22ம் தேதி இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. அதற்கு அடுத்தநாளே(ஜூன 23) கிழக்கு பூர்வி சம்பாரன் மாவட்டம் மோதிஹாரியில் கால்வாய் மீது ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்ட சிறிய பாலம் முழுவதும் இடிந்து விழுந்தது.

ஜூன் 27ம் தேதி கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு பாலமும், 29ம் தேதி மதுபானி மாவட்டம் மாதேபூர் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த 75 மீட்டர் நீள பாலமும், கடைசியாக கடந்த 30ம் தேதி பதாரியா பஞ்சாயத்தின் கோஷி டாங்கி கிராமத்தில் தாக்கூர்கஞ்ச் பகுதியில் பாலம் இடிந்து விழுந்தது.

இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பால விபத்து ஏற்பட்டுள்ளது. சிவான் மாவட்டம் தியோரியா தொகுதியில் பல கிராமங்களை இணைக்கும் விதமாக கண்டகி ஆற்றின் மீது ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஒருபகுதி நேற்று சரிந்து விழுந்து விபத்து நேரிட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தொடர் கனமழை காரணமாக விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. இது கடந்த 15 நாட்களில் நடந்த 7வது பால விபத்து.

Related posts

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை

தமிழகத்தில் 12ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்