செங்கல்பட்டு: செங்கல்பட்டு புறவழி சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளின் துர்நாற்றத்தினால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் செங்கல்பட்டு புறவழிசாலை வழியாகதான் தென் மாவட்டத்தை நோக்கி செல்கின்றன. அதேபோல், தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் செங்கல்பட்டு புறவழிசாலை வழியாகதான் சென்னை செல்கின்றன.குறிப்பாக, செங்கல்பட்டு புறவழிசாலையில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பயணிகளை ஏற்றி செல்லவும், தென் மாவட்டத்தில் இருந்து வரும் பயணிகளை இறக்கவும் செங்கல்பட்டு புறவழிசாலையில் பேருந்துகள் நின்று செல்வது வழக்கம்.
இந்நிலையில், செங்கல்பட்டு புறவழிசாலையில், இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி செல்வதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகின்றது. இந்த புறவழிசாலையை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் மூக்கை மூடிக்கொண்டு தான் கடந்து செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனவே நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் செங்கல்பட்டு புறவழிசாலை அருகே கொட்டியுள்ள இறைச்சி கழிவுகளை உடனே அகற்ற வேண்டும். இனி வரும் நாட்களில் இறைச்சி கழிவுகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.