செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்துள்ள தண்டரை கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக சுதாகர் (40) என்பவர் பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த புகழேந்தி என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை பெயர் மாற்றம் செய்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றபோது, பெயர் மாற்றம் செய்து தர புகழேந்தியிடம் சுதாகர் ரூ.7 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து, புகழேந்தி சென்னை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி புகழேந்தி ரூ.7 ஆயிரம் பணத்தை கொடுப்பதற்காக சுதாகரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, சுதாகர் தான் ஒரு அலுவலக மீட்டிங்கில் இருப்பதாகவும் அப்பணத்தை திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனது நண்பர் பழனி என்பவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, திருக்கழுக்குன்றம் சென்ற புகழேந்தி அங்கு பழனியை சந்தித்து பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு பழனியை சுற்றி வளைத்து பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் தான் புகழேந்தியிடம் பணத்தை வாங்க சொன்னதாக கூறியுள்ளார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் சுதாகரை கைது செய்தனர். லஞ்சப் பணம் பெறுவதற்கு உதவி செய்த அவரது நண்பர் பழனியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.