சேலம்: சேலத்தில் கான்ட்ராக்டரிடம் லஞ்சம் வாங்கி கைதான, ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் உள்பட 2 பேரை, கலெக்டர் பிருந்தாதேவி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த வரகூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். கான்ட்ராக்டரான இவர், தலைவாசல் பகுதியில் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டார். இதற்கு ₹90 லட்சம் கொடுக்க, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். இதற்காக ₹50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என ஊரக வளர்ச்சி முகமை அலுவலக உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் இளநிலை வரைபட அலுவலர் சாகுல் அமீது ஆகியோர் கேட்டுள்ளனர்.
இதனை செந்தில் வழங்கிய நிலையில், மேலும் ₹61 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். இதையடுத்து அவர்கள் கூறியபடி கடந்த 20ம் தேதி, செந்தில் ₹61 ஆயிரத்தை கொடுக்க முயன்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி செயற்பொறியாளர் மற்றும் வரைபட அலுவலரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ரவிச்சந்திரன் மற்றும் சாகுல் அமீது ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார்.