திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. அங்கித் திவாரியை 3 நாள் காவலில் எடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து அங்கித் திவாரியிடம் விடிய விடிய போலீஸ் விசாரணை நடத்தியது. இன்று காலை முதலும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகள் சிக்குவார்களா?
மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றபோது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டிச.1-ம் தேதி பிடிபட்டார். அரசு மருத்துவரிடம் லஞ்சம் கேட்டபோது உயர் அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என அங்கித் திவாரி மிரட்டியதாக புகார் எழுந்தது. அங்கித் திவாரி கூறிய அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் யார், யார் என்பதை கண்டறிய என போலீஸ் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. மருத்துவரிடம் பெற்ற லஞ்சப் பணத்தை பங்கு போட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குறித்தும் அங்கித் திவாரியிடம் சரமாரி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
லஞ்சப் பணத்தை பங்கு போட்ட ED அதிகாரிகள் யார், யார்?
மதுரை, சென்னையில் உள்ள அமலாக்கத்துறையின் மூத்த அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை பங்கு கொடுக்க இருந்ததாக திவாரி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன. தேவைப்பட்டால் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை அவர் பணிபுரியும் மதுரை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.