Sunday, September 8, 2024
Home » மார்பக அறுவை சிகிச்சை… தெரிந்ததும், தெரிய வேண்டியதும்!

மார்பக அறுவை சிகிச்சை… தெரிந்ததும், தெரிய வேண்டியதும்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் என்பது இன்று வேகமாக அதிகரித்து வரும் சூழலில் அதற்கு முக்கியத் தீர்வாக மார்பக அறுவை சிகிச்சையும் அதிகமாகி வருகிறது. அதனால் அறுவை சிகிச்சை செய்த பின் அதிலிருந்து உடலியல் ரீதியாக எப்படி மீண்டு வருவது, என்னென்ன பாதிப்புகள் வரும், இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டியதும் மிக அவசியம் ஆகிறது. அதற்காகவே இந்தக் கட்டுரை.

மார்பகங்கள்…

பாலூட்டும் உறுப்பாக இயற்கை அமைத்திருக்கும் மார்பகத்தில் கொழுப்பு திசுக்கள், ரத்த நாளங்கள், நரம்புகள், நிணநீர் நாளங்கள், தாய்ப்பாலினை சுரந்து சேர்த்து வைக்கும் சுரப்பிகளும், அதற்கான குழாய் வடிவங்களும் இடம்பெற்றிருக்கும்.மார்பகங்களுக்கு பின்னால் நெஞ்சுக் கூட்டின் தசைகள், நெஞ்சு எலும்பு, விளா எலும்புகள் என அமைந்திருக்கும்.

மேஸ்டெக்டோமி…

மார்பகத்தினை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதனை மருத்துவத்தில் மேஸ்டெக்டோமி என அழைப்பர்.மொத்த மார்பக திசுக்களையும் நீக்குவது, சிறிய பகுதியை மட்டும் நீக்குவது என பல வகைகள் உள்ளன. ஒருவரின் நோயின் தன்மைக்கேற்ப இவை மாறுபடும்.

காரணங்கள்…

* 99 சதவிகித மார்பக அறுவை சிகிச்சைக்கு காரணம் மார்பக புற்றுநோய். வெவ்வேறு வகை புற்றுநோயும் அதன் வீரியம் மற்றும் பரவும் தன்மையையும் வைத்து எவ்வகை அறுவை சிகிச்சை என முடிவு செய்வர்.

* புற்று நோய் இல்லாமல் வெகு சில மார்பக கட்டிகள், மார்பகங்களை பாதிக்கும் மரபணு நோய்கள் என சில காரணங்களாக இருக்கலாம்.

பாதிப்புகள்…

* அறுவை சிகிச்சை முடிந்த பின் தோள்பட்டையை தூக்க முடியாமல் வலிப்பது. இதனால் தோள்பட்டை மூட்டு இறுகி கைகளை மேலே உயர்த்த முடியாமல் போகலாம்.

* மார்பக நிணநீர் சுரப்பிகளை நீக்கிவிடுவதால் கைகளிலிருந்து உடலுக்கு செல்ல வேண்டிய நிணநீர் குழாய் மார்க்கம் பாதிக்கப்படும். இதனால் கைகளில் நிணநீர் முழுவதும் தேங்கி நின்றுவிடும். எனவே கைகள் வீங்கியவாறு இருக்கும்.

* கைகளை அசைக்காமல் வைத்திருப்பதால் ரத்த ஓட்டம் குறைவாய் இருக்கும்.

* பயத்தினால், வலியினால் கூன் வடிவில் முன் வளைந்து உட்காருந்திருப்பதால் கழுத்திலும் மேல் முதுகிலும் வலி வரக்கூடும்.

*தோள்பட்டையை அசைக்காமல் வைத்திருப்பதால் நெஞ்சுக் கூடு தசைகள் இறுக்கமாய் மாறிவிடும்.

* மார்பகத்தில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் நன்றாக விரிந்து மூச்சு விடுவது சிரமமாய் இருக்கும் என்பதால் நுரையீரலில் சளி சேரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

*மேலும் அறுவை சிகிச்சை முடிந்த சில வாரங்களுக்கு படுக்கையிலேயே இருப்பதால் இதய நுரையீரலின் தாங்கும் ஆற்றல் பாதிக்கப்படும்.

அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பும் பின்பும் இயன்முறை மருத்துவம் இன்றியமையாதது ஆகும்.

அறுவை சிகிச்சைக்கு பின்…

*தோள்பட்டை மூட்டை அசைக்கும் பயிற்சிகள் வழங்குவர். இதனால் தோள்பட்டை மூட்டினை இறுகாமல் பாதுகாக்க முடியும்.

*கையில் தேங்கும் நிணநீரினை மசாஜ் மூலம் தேங்கவிடாமல் தடுப்பர்.

இதனால் கைகள் வீங்காமல் பாதுகாக்கப்படும். மேலும் நிணநீரும் உரிய முறையில் உடலில் சேர்ந்துவிடும்.

*கைகள், தோள்பட்டையை அசைக்கும் பயிற்சிகளை கற்றுக்கொடுப்பர். இதனால் அறுவை சிகிச்சை செய்த இடத்திற்கும் அதனை சுற்றியுள்ள இடத்திற்கும் சீரான ரத்த ஓட்டம் உண்டாகும்.

*நெஞ்சு தசைகளை நன்றாக விரிந்து சுருங்கும்படி உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுப்பர். இதனால் கழுத்து வலி, மேல் முதுகு வலி வருவதை தடுக்க முடியும்.

*நெஞ்சு கூட்டு தசைகளுக்கு உரிய தசை தளர்வு (Stretching exercises) பயிற்சிகள் வழங்கப்படும்.

*நெஞ்சு சளி சேராமல் உரிய நுட்பங்கள் மூலம் சளியினை அகற்றிவிடுவர்.

*மூச்சுப் பயிற்சிகள், எளிமையான வேறு சில பயிற்சிகள் மூலம் இதய நுரையீரலின் ‘தாங்கும் ஆற்றலினை’ (Cardiac Endurance) அதிகரிக்கவும் செய்வர். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது இயல்பு.

அறுவை சிகிச்சைக்கு முன்…

*மேல் சொன்ன அனைத்து உடற் பயிற்சிகளையும் இயன்முறை மருத்துவர் அறுவை சிகிச்சைக்கு முன்பும் பரிந்துரைத்து கற்றுக் கொடுப்பர். இதனால் அறுவை சிகிச்சை செய்தபின் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். மேலும் அறுவை சிகிச்சைக்கு பின் வரும் பக்கவிளைவுகளையும் தவிர்க்கலாம்.

ஆகவே, அறுவை சிகிச்சை செய்துகொண்டால் மட்டும் போதுமானது என எண்ணாமல் மார்பக அறுவை சிகிச்சைக்குப் பின் வரும் பாதிப்புகளையும் அதனை எதிர்கொள்ள உதவியாய் இருக்கும் இயன்முறை மருத்துவம் பற்றியும் அறிந்து அதன் வழி நடப்பது அவசியமாகிறது என்பதனை இந்த பொங்கல் திருநாளில் தெரிந்துகொள்வோம்.

தரவுகளின் தகவல்கள்…

* இந்தியப் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் பதினான்கு சதவிகிதம் மார்பகப் புற்றுநோய்.

* 2018 ஆம் ஆண்டு ஆய்வின் முடிவில் 1,60,000 பெண்கள் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாகவும், எண்பதாயிரம் பேர் நோயின் தாக்கத்தில் இறந்து போவதாகவும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

* இந்தியப் பெண்கள் முதல் மற்றும் இரண்டாம் கட்ட புற்றுநோயினை எளிதில் கண்டறிய தவறிவிடுவதால் ஐம்பது சதவிகித பெண்கள் நோய் முற்றிய மூன்று மற்றும் நான்காம் கட்டத்தில் கண்டறிகிறார்கள்.

You may also like

Leave a Comment

two × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi