Friday, June 28, 2024
Home » முதல்வரின் காலை உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு சுவையாக வழங்கப்படுகிறதா?

முதல்வரின் காலை உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு சுவையாக வழங்கப்படுகிறதா?

by Lakshmipathi

*உணவருந்தி கலெக்டர் ஆய்வு

விராலிமலை : உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி கலெக்டர் மெர்சி ரமயா, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு சுவையாக வழங்கப்படுகிறதா? என்று உணவருந்தி கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு மேற்கொண்டார்.விராலிமலை வட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளின் பணிகளை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை விராலிமலையில் தங்கியிருந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் புதன்கிழமை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின்படி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான உயர் அலுவலர்கள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கியிருந்து பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்கள் மேம்பட்ட சேவைகள் வழங்கும் திட்டங்களை விரைவு படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.

மேலும், பொது மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பொதுமக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை பிறக்கிறது.அந்த வகையில், விராலிமலைக்கு நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வந்த மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா அன்று முழுவதும் பல்வேறு ஊராட்சிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து விராலிமலை நெடுஞ்சாலை துறை ஓய்வு விடுதியில் இரவு தங்கியிருந்து, நேற்று அதிகாலை அதிகாரிகளை அழைத்து கொண்டு விராலிமலை பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வருகை, மருத்து, மாத்திரைகள் இருப்பு நிலை, தூய்மை பராமரிப்பு உள்ளிட்டவைகலை பார்வையிட்டு வெளி மற்றும் உள் நோயாளிகளை கனிவோடு கவனிக்க வேண்டும். நோயோடு வரும் அவர்களை வார்த்தைகளால் வஞ்சித்து மேலும் மன நோய் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார், பேருந்து நிலையம் சென்ற கலெக்டர் பெரும்பாலான பேருந்துகள் நிலையத்திற்குள் வராமல் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதிகாரிகளை அழைத்து அனைத்து பேருந்துகளும் நிலையத்திற்குள் வந்து செல்வதை உறுதிபடுத்த வேண்டும் என்று கடுமையாக எச்சரித்து போக்குவரத்து துறை கண்காணிப்பாளர் ஒருவரை உடனடியாக அமர்த்தினார்.

தொடர்ந்து விராலிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்ற கலெக்டர் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவு தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்டு சுகாதாரத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, நேற்று காலை உணவான கோதுமை கிச்சடி, வெங்காய சாம்பாரை உண்டு ருசி பார்த்தார்.

தொடர்ந்து, அங்கு உணவருந்தி கொண்டிருந்த குழந்தைகள் அருகில் அமர்ந்து அவர்கள் உண்ணும் அழகை கண்டு ரசித்தார். தொடர்ந்து, உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்வை முடித்து கொண்ட அவர், அதிகாரிகள், அலுவலர்கள் தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் தொய்வு இல்லாமல் செயல்படுத்த தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி மாவட்ட தலைநகர் புதுக்கோட்டை புறப்பட்டு சென்றார்.

நிகழ்ச்சியில் இணை இயக்குநர் பிரியா தேன்மொழி (மருத்தும் மற்றும் ஊரக நலப்பணிகள்), தாசில்தார் கருப்பையா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி(கிஊ), வட்ட வழங்கள் அலுவலர் சரவணகுமார், விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் ரவி, துணைத்தலைவர் தீபன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi