சென்னை: ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ ஆகஸ்ட் 25 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது. ரூ.404 கோடி செலவில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளை கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் விரிவுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை சிற்றுண்டி உணவு திட்டத்தின் விரிவுபடுத்தும் நிகழ்வை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், இந்த திட்டத்தை கண்காணிக்க கூடுதல் அதிகாரிகளை நியமித்து, தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தை தினமும் கண்காணிக்க, கலெக்டரின் தனி உதவியாளர் (மதியம் உணவு திட்டம்), பிடிஓ (பிளாக் பஞ்சாயத்துகள்) மற்றும் துணை பிடிஓ (மதிய உணவு திட்டம்) ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.