கோவை: அதிமுகவை ஒன்றிணைக்க ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் எந்த அணியையும் சாராத கே.சி.பழனிசாமி ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது. இதுகுறித்து எடப்பாடி கருத்து தெரிவித்தபோது, தன்னை அவதூறாக பேசியதாக முன்னாள் அதிமுக எம்பி., கே.சி.பழனிசாமி, கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கோவை ஜேஎம்எண் 1-ல் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.
இதைத்தொடர்ந்து கோவை நீதிமன்ற வளாகத்தில் கே.சி.பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிச்சாமி இன்னும் கிளைசெயலாளர் அளவிலே செயல்படுகிறார். யாரையும் அரவணைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை. அதிமுக தலைமைக்கு அவர் தகுதியற்றவர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டு இருக்க வேண்டும். அதிமுகவின் வாக்குகள் திமுகவிற்கு சென்று கொண்டிருக்கிறது. கோவையிலும் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு கே.சி.பழனிசாமி கூறினார்.