மதுரை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வக்கனக்கோட்டையை சேர்ந்த கதிரேசன் மகன் நித்திஷ் (16). கடந்த 26ம் தேதி டூவீலர் விபத்தில் நித்திஷ் தலையில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
பெற்றோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததை தொடர்ந்து, நித்திஷின் இதயம் சென்னை தனியார் மருத்துவமனை, கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனைகளுக்கும், சிறுநீரகங்கள் மதுரை அரசு மருத்துவமனை மற்றும் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கும், தோல் மதுரை தனியார் மருத்துவமனைக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் குடும்பத்தினரிடம் நித்திஷின் உடல் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தினர், தமிழக அரசின் சார்பில் நித்திஷ் உடலுக்கு மரியாதை செய்தனர். மதுரை அரசு மருத்துவமனை டீன் (பொறுப்பு) தர்மராஜ், தீவிர விபத்து சிகிச்சை பிரிவின் உதவி நிலைய மருத்துவ அலுவலர் முருகு பொற்செல்வி ஆகியோர் கூறுகையில், ‘‘நித்திஷின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் பயனடைந்துள்ளனர்’’ என்றனர்.