வேறு பெண்ணுடன் நடக்கவிருந்த காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்தி கரம்பிடித்த இளம்பெண்

குளச்சல்: வேறு பெண்ணுடன் நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி,காதலனை போராடி கரம்பிடித்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் லெனின் கிராஸ் (29). இன்ஜினியரிங் படித்து விட்டு துபாயில் வேலை செய்கிறார். இவருக்கும் நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த பி.காம்.பட்டதாரி ரிமோலின் விண்ணரசிக்கும் (24) வாட்ஸ் அப் குழு மூலம் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 வருடமாக இருவரும் காதலித்துள்ளனர்.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரிமோலின் விண்ணரசியுடன் லெனின் கிராஸ் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வெளிநாடு சென்ற லெனின் கிராஸ், காதலிக்கு மாதம் ₹5 ஆயிரம் அனுப்புவாராம். வெளிநாட்டில் இருந்தும் வாட்ஸ் அப்பில் தினமும் பேசி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு லெனின் கிராஸ் சொந்த ஊர் திரும்பினார். பெற்றோர் அவருக்கு குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்த பெண்ணை பார்த்து கடந்த 11ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர்.

அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணத்திற்காக அனைவரும் கூடியிருந்தனர். இதுபற்றி அறிந்த ரிமோலின் விண்ணரசி அந்த தேவாலயத்துக்கு வந்து, பங்குத்தந்தையிடம் முறையிட்டார். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. பின்னர் அவர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் செய்தார். இதையடுத்து குளச்சல் போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். முன்னதாக லெனின் கிராஸ், இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து போட்டோக்களையும் அழித்து விட்டார். இதனால் போலீசாரால் முடிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது.

ஆனால் விண்ணரசி கூகுள் இணைய தளத்திலிருந்து ‘போட்டோ ரெக்கவரி’ மூலம் போட்டோக்களை மீட்டு போலீசாரிடம் காண்பித்தார். இதையடுத்து ரிமோலின் விண்ணரசியை திருமணம் செய்யும்படி லெனின் கிராசுக்கு போலீசார் அறிவுரை கூறினர். அதற்கு சம்மதித்த அவர், நேற்று முன்தினம் இரவு குளச்சலில் ஒரு குருசடி முன்பு இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

Related posts

தாய்லாந்துக்கு தப்பிச்செல்ல முயன்ற கேரள தலைமறைவு குற்றவாளி கைது

புளியந்தோப்பு சரகத்தில் ஒரேநாளில் 13 ரவுடிகள் கைது

காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பலாத்காரம்: 5 பேர் கைது