அன்னூர்: மாணவனுடன் பேசிய மாணவியை புகைப்படம் எடுத்து மிரட்டி சில்மிஷம் செய்த வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், அன்னூர் அருகே கோவில்பாளையம் பகுதியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவனும், மாணவியும் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோவில்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த ரவிக்குமார், மாணவனும் மாணவியும் பேசிக்கொண்டிருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.
அதன்பிறகு அவர் அந்த மாணவியை மிரட்டி பணம் கேட்டதுடன், சில்மிஷம் செய்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி, அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து அவரது பெற்றோர், போலீஸ்காரர் ரவிக்குமார் மீது கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வழக்கு சூலூர் மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. சூலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீஸ்காரர் ரவிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவிக்குமார் மீது ஏற்கனவே பீளமேடு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது பல்வேறு முறைகேடு புகார்கள் வந்ததால் கோவில்பாளையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.