தாவரவியல் பூங்காவில் ‘குயின் ஆப் சைனா’ மலர்கள் பூத்திருச்சு

*சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி : ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் பூத்துக் குலுங்கும் சீனாவின் அரசி எனப்படும் (குயின் ஆப் சைனா) பவுலோனியா பார்சினி மலர்கள் தற்போது பூக்கத் துவங்கியுள்ளது.
சீனாவின் அரசி என பவுலோனியா பார்சினி என்ற வகை மலர்கள் அழைக்கப்படுகிறது. இந்த மலர்கள் மரங்களில் பூக்கக்கூடியவை.

இவை சீன நாட்டில் அதிகளவு உள்ளன. இந்த மரங்கள் அங்கு பல்வேறு சாதனங்கள் செய்வதற்காகவும், மர இழைகள் தயாரிப்பதற்காகவும் வளர்க்கப்படுகிறது. குளிர் காலத்தில் (டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை) இந்த மரம் முழுவதும் உள்ள கிளைகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும். பார்ப்பதற்கு மரமே வெள்ளை நிறம் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.இதனை, சீன மக்கள் குயின் ஆப் சைனா என்று அழைக்கின்றனர். இவ்வகை மரங்கள் இந்தியாவில் அரிதாகவே காணப்படுகிறது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஒரே ஒரு மரம் மட்டுமே உள்ளது.கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சீனாவில் இருந்து இம்மரம் கொண்டு வரப்பட்டு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கும். ஆனால், இம்முறை கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை பெய்ததால், பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டது.

இதனால், பனி காலத்தில் பூக்கும் இந்த மரங்களில் பூக்காமல் இருந்தது. மரம் முழுவதும் மொட்டுக்களே காணப்பட்டது.தற்போது நீர்பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இம்மரத்தில் ஒரு சில கிளைகளில் மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளன. அரிதாக காணக் கிடைக்கும் இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு