Friday, September 20, 2024
Home » வரப்பிரசாதம்

வரப்பிரசாதம்

by Karthik Yash

தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்துள்ளதால் நடுத்தர மக்களின், வீடு கட்டும் கனவு எளிதில் நனவாக வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் கட்டிட அனுமதிக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளிலும் ஆன்லைனில் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்தாண்டு அக்.2ம் தேதி முதல் ஊராட்சிகளில் கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதையொட்டி பல்வேறு சலுகைகளையும் தமிழக அரசு அறிவித்தது.

தளப்பரப்பு குறியீட்டிலும், பணிமுடிப்பு சான்றிதழ் பெறுவதிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டிட விதிகளின் அடிப்படையில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்துக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது. இதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற அவசியம் இல்லை. உயரமில்லா கட்டிடங்களுக்கான அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்தப்பட்டது.

அதேபோல், 300 சதுரமீட்டர் வரையும், உயரத்தில் 14 மீட்டருக்கு மிகாமலும் கட்டப்படும் வணிக கட்டிடங்களுக்கும் பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் 2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்துக்கு கட்டிட அனுமதி தேவையில்லை. பணி முடிவு சான்று பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழகத்தில் முதல் முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை நேற்று தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.541.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.382.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இத்திட்டத்தின் படி, ‘www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டியதில்லை. கட்டிடப்பணிகள் முடிந்ததும், முடிவுச்சான்று பெறுவதில் இருந்தும் விலக்களிக்கப்படுகிறது. பரிசீலனைக் கட்டணம், கட்டமைப்பு, வசதிக் கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்களிக்கப்படுகிறது. 2500 சதுரடி வரையிலான மனையில், 3500 சதுரடியில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீடு அல்லது கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி பெறுவது மிகவும் எளிதானதாகும். திட்ட அனுமதி பெறுதலில் உள்ள சங்கடம் மற்றும் கால தாமதம் ஆகியவை கடந்த கால செய்தியாகும். இப்போதுள்ள புதிய ஒழுங்கு முறையில், நீங்கள் திட்ட அனுமதியை விரைவில் பெறுவதை இத்திட்டம் உறுதி செய்துள்ளது. இதனால் நடுத்தர மக்களின், வீடு கட்டும் கனவு எளிதில் நனவாக வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

You may also like

Leave a Comment

15 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi