சென்னை: கோவையை சேர்ந்த நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் சார்பில், அதன் பொதுச் செயலாளர் அன்புராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், போக்குவரத்து கழங்கங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒப்புதலுடன், மாதாந்திர ஊதியத்திலிருந்து சங்கத்தின் சந்தா தொகை பிடித்தம் செய்யப்பட்டு தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்படும் நடைமுறை அமலில் உள்ளது. ஆனால், தீபாவளி பண்டிகையையொட்டி ஊழியர்களின் வருடாந்திர போனஸ் தொகையிலும் தொழிற்சங்கங்களுக்காக பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே ஊழியர்களின் ஒப்புதல் இன்றி போனஸ் தொகையில் பிடித்தம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஆர்.ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, தொழிலாளர்களிடம் கூட தெரிவிக்காமல் அவர்களின் போனஸ் மற்றும் சம்பளத்தில் சந்தா தொகையை பிடித்தம் செய்கிறர்கள். வருடாந்திர போனஸ் தொகையில் தொழிற்சங்கங்களுக்கு பணம் பிடித்தம் செய்யப்படுவதால் பண்டிகைக்காக கடன் வாங்க வேண்டிய நிலைக்கு மீண்டும் தள்ளப்படுகிறார்கள் என்று வாதிட்டார். இதையடுத்து, இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசும், போக்குவரத்து கழகங்களும் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.