சென்னை: மெட்ரோ ரயில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராசன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சி.எம்.ஆர்.எல் தொழிலாளர்களுக்கு 10 ஆண்டுகளாக போனஸ் மறுக்கப்பட்டு வருகிறது. போனஸ் சட்டத்தின் உச்சவரம்பை கணக்கில் கொள்ளாமல்தான் அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் கருணைத் தொகையாக தீபாவளி நேரத்தில் வழங்கப்படுகிறது.
இதர அரசு நிறுவனங்களில் செயலில் இருக்கும் இந்த நியதியும் தங்களுக்கு பொருந்தாது என்று சி.எம்.ஆர்.எல் நிர்வாகம் தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது. சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் இந்த தன்னிச்சையான போக்கை முதல்வர் கைவிடச் செய்து, மெட்ரோ ரயில் தொழிலாளர்களுக்கும் போனஸ் கருணைத் தொகை வழங்க முதல்வர் ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.