சென்னை: வெடிகுண்டு கண்டறிதல், அதற்கான உபகரணங்களை கையாளும் திறன் மேம்பாட்டு பயிற்சி போட்டியில் ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக முதல் பரிசு பெற்ற வினோத்குமார் என்ற காவலரை ஆவடி காவல் ஆணையாளர் அருண் ஐபிஎஸ் பாராட்டினார். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட இ-3 மிஞ்சூர் காவல்நிலையத்தில் காவலராக வினோத்குமார் பணிபுரிகிறார்.
இவர், தமிழ்நாடு காவல் பிரிவில் நடைபெற்ற வெடிகுண்டு பற்றிய புத்துணர்வு பயிற்சியில் 1) வெடிகுண்டு கண்டுபிடிப்புச் சோதனை, 2) வெடிகுண்டு செயலிழப்பு சோதனை, 3) வெடிகுண்டு கையாள்வது, 4) வெடிகுண்டு கண்டறியும் உபகரணங்களை கையாள்வது போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சி போட்டியில் ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக முதல் பரிசு வென்றார். இவரை ஆவடி காவல் ஆணையாளர் அருண் ஐபிஎஸ் நேரில் வரவழைத்து வெகுவாக பாராட்டி சான்றிதழை வழங்கினார்.