திருவண்ணாமலை: காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு நேற்று மதியம் ஒரு மர்ம நபர் போன் செய்தார். திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கும், செங்கம் தாலுகா அலுவலகத்துக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுத்து விட்டு போனை துண்டித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்தில் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, மெட்டல் டிடெக்டர் கருவியுடன் தீவிர சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடந்தது. ஆனால் எதுவும் சிக்கவில்லை.
அதேபோல், செங்கம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சோதனையிலும் வெடி பொருட்கள் சிக்கவில்லை. மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர். இதேபோல மதுரையில் நரிமேடு, திருப்பரங்குன்றம் பகுதிகளின் ஒன்றிய அரசு பள்ளிகள், மதுரை பொன்மேனி, நாகமலை புதுக்கோட்டை தனியார் பள்ளிகள் என 4 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சோதனையில் எதுவும் சிக்கவில்லை.