கருங்கல் : கருங்கல் அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன். கட்டிட காண்டிராக்டர். தற்போது மாங்கரை பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெனிலா ஜோபி(23). இவரை கருங்கல் அருகே எட்டணி பகுதியை சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தனர்.
சேம் மரியதாஸ் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
திருமணத்திற்கு பின் ஜெனிலா கணவர் குடும்பத்தினருடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.இந்நிலையில் சேம் மரியதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு தூங்கிக் கொண்டிருந்த ெஜனிலா ஜோபியை கத்தியால் குத்திக்கொலை செய்தார். இதையடுத்து டோடா பல்லாப்பூர் காவல் நிலைய போலீசார் சேம் மரியதாஸை கைது செய்தனர்.
தொடர்ந்து ஜெனிலா ஜோபியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு ஜெனிலா ஜோபியின் உடல் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஜெனிலா ஜோபியின் உடலை பெற்றோர் வீட்டில் புதைக்காமல், கருங்கல் எட்டணி பகுதியில் கணவர் சேம் மரியதாசுக்கு சொந்தமான வீட்டின் முன் பகுதியிலேயே புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக நேற்று ஜெனிலா ஜோபியின் உடல் மாங்கரையில் இருந்து அங்கு கொண்டு வரப்பட்டது. அந்த வீட்டில் தற்போது சேம் மரியதாசின் பாட்டி மட்டும் வசித்து வரும் நிலையில் ஜெனிலா ஜோபியின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் உறவினர்களின் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் சம்மதித்த நிலையில், கொலை செய்த கணவரின் வீட்டின் முன் உடலை புதைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்பகுதியில் பாறை இருந்ததால் பாறை உடைக்க பயன்படுத்தும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டு ஜெனிலா ஜோபியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அசம்பாவிதம் நடைபெறுவதை தடுப்பதற்காக கருங்கல் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.