படகு இல்லம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதால் பரபரப்பு

ஊட்டி : ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டி படகு இல்லம் பகுதிக்கு சென்று, அங்குள்ள ஏரியில் படகு சவாரி மேற்கொள்கின்றனர். அங்கு குதிரை சவாரி செய்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக ஸ்வெட்டர், பழங்கள், கைவினை பொருட்கள் ஆகியவைகளை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

இந்த பொருட்கள் விற்பனை செய்வதற்காக இங்குள்ள பார்க்கிங் தளத்தில் கடைகள் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. எனிவும், ஒரு சிலர் கைவினை பொருட்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை இங்குள்ள சாலையோரங்களில் தற்காலிக கடைகள் போட்டு விற்பனை செய்கின்றனர். இதனால், இங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இவைகளை அகற்ற வேண்டும் என நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று நகராட்சி நிர்வாகம் இப்பகுதிக்கு சென்று அனுமதியின்றி சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டது.அப்போது, சிலர் இந்த கடைகளை அகற்றக்கூடாது என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், அதிகாரிகள் எதனையும் பொருட்படுத்தாமல், படகு இல்லம் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தையும் அகற்றினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்