Sunday, June 30, 2024
Home » பூப்பெய்திய பெண் குழந்தைகள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!

பூப்பெய்திய பெண் குழந்தைகள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!

by Lavanya

ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது பூப்பெய்தும் நிகழ்வுதான். விளையாட்டுத் தனமாக துள்ளித் திரிந்த ஒரு குழந்தை, முதிர்ந்த பெண்ணாகத் தன்னை உருமாற்றிக்கொள்வதற்கான தொடக்கப்புள்ளிதான் பூப்பெய்தும் நிகழ்வு. அதனால் ‘பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பூப்பெய்திய பெண் குழந்தைகளின் விஷயத்தில் முதலில் கண்காணிக்க வேண்டியது உடல் எடையைத்தான்.

பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் ‘சத்துள்ள உணவாகச் சாப்பிட வேண்டும்’ என்று நினைத்து கெட்ட கொழுப்பு, கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அளவுக்கு மீறிச் சாப்பிடக்கொடுக்கிறார்கள். இதனால் சரியான எடையைப் பராமரிக்க முடியாமல், உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்எடை அதிகரிப்பதால், மாதவிடாய் தள்ளிப்போவது, தைராய்டு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

மேலும் உடல் பருமனால் கருமுட்டை வளர்ச்சிக்குத் தேவையான ஃபாலிக்கில் ஸ்டிமுலேட்டிங் (Follicle Stimulating) மற்றும் லியூட்டினைஸிங் (Luteinizing) என்ற இரு ஹார்மோன்களும் பாதிக்கப்படும். இந்த இரண்டு ஹார்மோன்களும் பாதிக்கப்படுவதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் (PCOS) உருவாகி, பிற்காலத்தில் தாய்மை அடைவதும் கேள்விக்குறியாகும். எனவே, ஒரு பெண் குழந்தை பூப்பெய்தியதும் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியவது அவசியம்” என்கிறார் சித்த மருத்துவர் மானக்சா. பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள் குறித்தும் அவரே விளக்குகிறார்.

1. கறுப்பு உளுந்து

தோல் நீக்காமல் கறுப்பு உளுந்தில் வடை, களி செய்தும், சத்துமாவாகப் பொடித்தும் சாப்பிடலாம். சத்துமாவு மற்றும் களி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.

2. நல்லெண்ணெய்

ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டிற்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். நல்லெண்ணெயில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

3. பொட்டுக் கடலை பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச் சர்க்கரைசேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும்.

4. நாட்டு முட்டை பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். எந்த முட்டையையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது.

5. கம்பு வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்துச் சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெறக் கம்பு உறுதுணை புரியும்.

6. அசைவ உணவுகள்

மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

7. பாகற்காய், சுண்டைக்காய் சில பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் நாட்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம். உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. மருத்துவரின் ஆலோசனையுடன் நாக்குப் பூச்சி மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.

8. கொண்டைக் கடலை கறுப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

9. கீரை வகைகள் மாதவிடாய் நாட்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தச்சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக்கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

10. சத்துமாவு உருண்டை கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்துமாவு உருண்டையை மாதத்திற்கு 3 நாட்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாட்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.

சில பெண்குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கும். இதனால் பெற்றோர் பதற்றம் அடையத் தேவையில்லை. சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும். சில பெற்றோர் பொறுமையாக இல்லாமல், குழந்தைகளுக்குத் தேவையற்ற மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். இதன் விளைவாக ஹார்மோன்களின் செயல்பாடு குறைந்துவிடும் அல்லது அதிகரித்துவிடும்” என்று எச்சரிக்கிறார்.

சித்த மருத்துவர்
ஒய்.ஆர்.மானக்சா

 

You may also like

Leave a Comment

17 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi