இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதியில் வெற்றி?: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் எம்பியுமான சந்தீப் தீக்ஷித் ெடல்லியில் அளித்த பேட்டியில், ‘நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கணிசமான வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. ‘வோட் ஃபார் டெமாக்ரசி’ என்ற அமைப்பின் ஆய்வறிக்கையின் படி, தலைமைத் தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் முதலில் கூறியதற்கும், பின்னர் அளித்த இறுதி புள்ளி விபரங்களுக்கும் இடையே சராசரியாக 4.7 சதவீதம் வித்தியாசம் உள்ளது. இது தேசிய அளவில் சுமார் 5 கோடி வாக்குகளாகும். ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 12.5 சதவீதம் வரை வித்தியாசம் உள்ளது. லட்சத்தீவு உள்ளிட்ட சில இடங்களில் 25 சதவீதம் வரையிலும் பெரிய வித்தியாசம் உள்ளது. இதுதான் பல கேள்விகளை எழுப்புகிறது.

‘வோட் ஃபார் டெமாக்ரசி’ என்ற அமைப்பு பாஜக வெற்றி பெற்ற 79 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. முதல் கட்டத்தின் இறுதி புள்ளிவிவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் 11 நாட்கள் எடுத்துக் கொண்டது. இரண்டாவது கட்டத்திற்கு 6 நாட்கள் மற்றும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு 4 முதல் 5 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டில், வாக்குப்பதிவின் ஆரம்ப மற்றும் இறுதி புள்ளிவிபரங்களில் 1 சதவீத வித்தியாசம் மட்டுமே இருந்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்தை பெறமுடியாத நிலையில், தற்போது குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related posts

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!