அதில், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜ போட்டியிடாது, மாநிலக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம் என அறிவித்துள்ளனர். இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமல்ல, வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களிலும் பாஜ டெபாசிட் பெற முடியாது என்ற காரணத்தை உணர்ந்துள்ளனர். இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில் 3ல் இருந்து விலகி உள்ளனர். போகப்போக எத்தனை மாநிலங்களில் போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறோம் என சொல்வார்களோ தெரியாது. பாஜ ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் வதோதரா மற்றும் சம்பர்கந்தா லோக்சபா தொகுதிகளுக்கு பாஜ சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், ரஞ்சன்பென் பட் மற்றும் பிகாஜி தாக்கூர் ஆகியோர் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதற்கு அர்த்தம், தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை. வெற்றி பெறாத இடத்தில் நாங்கள் ஏன் நிற்க வேண்டும் என விலகி உள்ளனர். தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலும், பாஜவின் தோல்வி 100 சதவீதம் உறுதியாகி உள்ளது. பாஜ ஆட்சியில் வெறுப்பு அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் ஒரு முதல்வர் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி முதல்வர் கைதாகியுள்ளார். இரண்டு மாத காலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட இரு மாநில முதல்வர்கள் கைது செய்யப்படுவது, இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்தியா கூட்டணியின் வெற்றி மிகப்பெரிய அளவில் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.