அதிமுக இல்லாத பாஜ கூட்டணியில் இணைய உதிரி கட்சிகளே யோசித்த நிலையில், முதல் கட்சியாக தமாகா இணைந்தது குறிப்பிடத்தக்கது. பாமக, தேமுதிக கட்சிகளை எப்படியாவது கூட்டணிக்கு இழுத்து விட வேண்டும் என பாஜ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பல்லடத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்றி விட வேண்டும் என்று அண்ணாமலை திட்டம் போட்டிருந்தார். ஆனால் பாஜவுடன் யாரும் கூட்டணி அமைக்க முன்வராததால் அவரது திட்டம் தவிடு பொடியாகிவிட்டது. இதனால் பாஜவில் தற்போதுள்ள கட்சிகள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க தயார் நிலையில் உள்ளது.
அதன்படி தமாகா 5 தொகுதிகளுக்கான பட்டியலை கொடுத்துள்ளது. அதில் 3 தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டுள்ளது. டெல்டா பகுதியான மயிலாடுதுறை தொகுதியை என்.ஆர்.நடராஜனுக்கும், கொங்கு மண்டலமான திருப்பூர் தொகுதியை முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகருக்கும், தென்மாவட்டமான திருநெல்வேலி தொகுதியை மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லசுக்கும் ஒதுக்கி தரும்படி கேட்டுள்ளார். இதுதவிர ஒரு ராஜ்யசபா சீட்டை தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் பாஜ தலைமையிடம் ஜி.கே.வாசன் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.