மும்பை: பாஜக கூட்டணி பொய் மற்றும் வதந்திகளைப் பரப்பி ஆட்சிக்கு வந்ததை மக்கள் நன்கு அறிவர் என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் விமர்சனம் செய்துள்ளார். பாட்னா, பெங்களூரைத் தொடர்ந்து INDIA கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நேற்றும் இன்றும் மும்பையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்துக்கு பின் இந்திய கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் இருந்ததால்தான் மோடி வெற்றி பெற்றுவிட்டார். எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால் மக்கள் துன்பத்துக்கு ஆளாகிவிட்டனர். நாட்டில் தற்போது சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற உணர்வில் இருக்கின்றனர் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய லாலு பிரசாத் யாதவ், கறுப்புப் பணத்தை மீட்டு நாட்டு மக்களின் வங்கிக்கணக்கில் போடுவதாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதியளித்தார். மோடி அளித்த ரூ.15 லட்சம் தரப்படும் என்ற வாக்குறுதியால் நானே வியப்படைந்தேன். பாஜக கூட்டணி பொய் மற்றும் வதந்திகளைப் பரப்பி ஆட்சிக்கு வந்ததை மக்கள் நன்கு அறிவர் என விமர்சனம் செய்தார்.