சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் பொது செயலாளார் வைகோ நேற்று அளித்த பேட்டி: பாஜ 2014ல் ஆட்சிக்கு வந்தது முதல் ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் படி நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து வருகிறது. எதிர்காலத்தில் ஜனநாயகத்தை காக்க முடியுமா, மதசார்பற்ற தன்மையை பாதுகாக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இந்தியா கூட்டணி உருவாகி உள்ளது.
இந்த கூட்டணி சுமுகமாக செயல்பட்டு வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசை நிச்சயம் மக்கள் தூக்கி எறிவார்கள். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய இடத்தில் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. கோயிலையும், இந்து மதத்தையும் காட்டி தமிழ்நாட்டில் பாஜகவால் ஓட்டு வாங்க முடியாது. இவ்வாறு வைகோ கூறினார்.