திருமலை: ஆந்திர மாநிலத்தில் விரைவில் 175 சட்டபேரவை தொகுதிக்கும், 25 மக்களவை தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்றுமுன்தினம் டெல்லி சென்றார். நள்ளிரவு 11.25 மணிக்கு அமித்ஷாவின் இல்லத்திற்கு சந்திரபாபு நாயுடு சென்றார்.
அங்கு அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருடன் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. விரைவில் தேர்தல் கூட்டணி குறித்து கூட்டு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சந்திரபாபு நேற்று காலை டெல்லியில் இருந்து ஐதராபாத்திற்கு புறப்பட்டார். இந்நிலையில் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் நேற்று இரவு டெல்லி சென்று அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.